Tuesday, February 04, 2014

உருளைக்கிழங்கு சாதம் செய்முறை



தேவையானப் பொருட்கள்:

அரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
காய்ந்தமிளகாய் - 2
தனியா விதை - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - 5
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நெய் - 1 டீஸ்பூன்


செய்முறை:
அரிசியை வேகவைத்து, சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை விட்டு, தனியா, பருப்புகள், மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து எடுத்து, ஆறியவுடன், உப்பையும் சேர்த்துப் பொடி செய்துக் கொள்ளவும்.

அதே வாணலியில், மீதி எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், முந்திரிப்பருப்பைச் சேர்த்து சிறிது வறுக்கவும். பின் கறிவேப்பிலைப் போட்டு வதக்கவும். அதன் பின் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போடவும். அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு, வறுத்து அரைத்த பொடி சேர்க்கவும். நன்றாகக் கிளறி விடவும். கடைசியில் சாதத்தைப் போட்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய்யையும் விட்டு, மீண்டும் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.
Download As PDF

No comments:

Post a Comment